தினமலர் நிறுவனர் டி.வி.ஆருக்கு தங்கவயல் தமிழ்ச்சங்கம் புகழாரம்
தினமலர் நிறுவனர் டி.வி.ஆருக்கு தங்கவயல் தமிழ்ச்சங்கம் புகழாரம்
UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:38 AM
தங்கவயல்:
பத்திரிகை தர்மத்தை கடைப்பிடிப்பதில், தினமலர் மற்ற நாளிதழ்களுக்கு வழிகாட்டி, என்று தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் புகழாரம் சூட்டினார்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில், தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கலையரசன் - தலைவர், தங்கவயல் தமிழ்ச்சங்கம்: தரமான பத்திரிகையாக, சாமானியர்கள் முதல் பல்வேறு துறைகளின் அறிஞர்கள் வரை பாராட்டுகிற நாளிதழாக, தமிழில் இன்று வரை விளங்குவது தினமலர். தமிழகம், கர்நாடக செய்திகள் மட்டுமின்றி தேசிய, சர்வதேச செய்திகளை பாரபட்சமின்றி வழங்கி வருகின்றனர்.
தினமலர் மற்ற நாளிதழ்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. தமிழர் நலன், தமிழர் ஒற்றுமை, பாரம்பரிய மொழி வளம் காப்பாற்றும் சேவையை பாராட்ட வேண்டும். பத்திரிகை உலகில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.
தேவேந்திரன் - தலைவர், எம்.ஜி.மார்க்கெட், வியாபாரிகள் சங்கம்: தினமலர் நேர்மையான பத்திரிகை. அதை நிறுவிய அய்யாவுக்கு கனிவான வாழ்த்துகள். அதன் வாசகர்களில் நானும் ஒருவன். உள்ளூர் செய்திகள் திருப்திகரமாக உள்ளது. நியாயத்திற்காக பல சவால்களை எதிர்க்கொண்டு சரித்திரத்தை தோற்றுவித்துள்ளார். இதன் தொண்டு தொடர வேண்டும்.
முருகன் - தலைவர், அம்பேத்கர் நலச் சங்கம்: குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிற பத்திரிகையாக இல்லாமல், பரந்த சிந்தனையுடன் சர்வதேச அளவில் நம் நாட்டின் பெருமைக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் துணிச்சல் தினமலருக்கு மட்டுமே உள்ளது. இதை நிறுவிய அய்யாவை நினைவுகூர்ந்து மலர் துாவி வணங்குகிறோம்.
கமல் முனிசாமி - செயலர், தங்கவயல் தமிழ்ச் சங்கம்: தினமலர் தமிழ் நாளிதழ், பத்திரிகை உலகில் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளது.
இந்த உயர்வான இடத்தை பிடிக்க டி.வி.ஆர்., அய்யா எத்தனை விதமான சிரமங்களை ஏற்று, தாங்கி நிமிர்ந்திருக்க வேண்டும். பல்வேறு நாளிதழ்கள் காணாமல் போய் உள்ள நிலையில், இன்னும் பல தலைமுறையை தாண்டி நிலையான இடத்தில் தினமலர் நீடித்து வருகிறது. அவர்கள் புகழ் என்றென்றும் ஓங்கி நிற்கும்.
தியாக தீபம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் சுப்பிரமணியம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜன், ரக்ஷணா வேதிகே நேசகுமார், ஜனார்த்தனன், திருமுருகன், கருணாகரன், ஆர்.வி.குமார், அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் டி.வி.ஆர்., படத்துக்கு மலர் துாவி வணங்கினர்.