தமிழர்கள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிப்பதே தி.மு.க., அரசின் சாதனை: துணை முதல்வர்
தமிழர்கள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசிப்பதே தி.மு.க., அரசின் சாதனை: துணை முதல்வர்
UPDATED : ஜன 12, 2026 09:02 AM
ADDED : ஜன 12, 2026 09:08 AM

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், 'தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்' என்ற தலைப்பில், 'அயலகத் தமிழர் தினவிழா' நேற்று துவங்கியது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த, உணவு, கலாசாரம், வணிகம், கைவினைப் பொருட்கள், தமிழ் இலக்கியம் உள்ளிட்டவை சார்ந்த, இருநூற்று ஐம்பத்து இரண்டு கண்காட்சி அரங்குகளை, துணை முதல்வர் உதயநிதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில், உதயநிதி பேசியதாவது:
துாரம் அதிகரிக்கும் போது, உறவும், பாசமும் அதிகரிக்கும். அந்த வகையில், உலகின் பலநாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வும் அதிகம். வெளிநாடுகளில், பலவிதமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவை, நம் தமிழர் திருநாளான பொங்கலுக்கு ஈடாகாது. தமிழ், அனைவரையும் இணைக்கும் மொழி. அது, யாரையும்வேறுபடுத்தி பிரிக்காது; பேதத்தை காட்டாது.
தமிழர் என்ற அடையாளத்தின் முன், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்ற எந்த அடையாளமும் போட்டி போட முடியாது. அந்த உணர்வால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன்களை பாதுகாப்பது தான், இந்த விழாவின் நோக்கம். முன்னர், தமிழகத்தில் இருந்து, சிறிய வேலைகளை செய்ய, தங்களின் குடும்பங்களை இங்கு விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு சென்றனர்.
தற்போது, இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர் என, வெளிநாடுகளில் தமிழர்கள் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இதுதான் தி.மு.க., அரசின் சாதனை. அயலக தமிழர் நலவாரியத்தில், முப்பத்து இரண்டாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழக மக்களின் மனதை அறிய, 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல, நீங்களும் உங்கள் கனவுகளை, உங்கள் துறை அமைச்சர் நாசரிடம் சொல்லுங்கள். உங்களுக்கான திட்டங்களை முதல்வர் தீட்டுவார். இவ்வாறு உதயநிதி பேசினார்.
நிகழ்ச்சியில் , வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இசைக்கருவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை, உதயநிதி வழங்கினார். பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், எம்.பி.,க்கள் , வர்த்தகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

