UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:42 AM

திருநெல்வேலி :
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் சின்னதுரை, 18. இவரது தங்கை சந்திரா செல்வி, பட்டியல் இனத்தினர். ஆகஸ்ட் 9ம் தேதி இவருடன் பள்ளியில் பயிலும் வேறு ஜாதி மாணவர்கள், வீடு புகுந்து, சின்னதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுத்த, சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்தது.
ஜாதி ரீதியாக தாக்குதலுக்குள்ளான இந்த தாக்குதல், தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர், தமிழ், 71, ஆங்கிலம், 93, பொருளாதாரம், 42, வணிகவியல், 84, கணக்குப்பதிவியல், 85, கணிப்பொறி பயன்பாடு பாடத்தில் 94 என, 600க்கு, 469 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கைகள் மற்றும் இடுப்பில் பலத்த வெட்டு காயமடைந்த அந்த மாணவர், சில நாட்களுக்கு முன் வரை, சிகிச்சையில் இருந்தார்.
அவரை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொலைபேசியில் பாராட்டினார்.