கல்விக்கடன்களில் வாராக்கடன் 2 சதவீதமாக ஆகக் குறைவு
கல்விக்கடன்களில் வாராக்கடன் 2 சதவீதமாக ஆகக் குறைவு
UPDATED : டிச 17, 2025 08:09 AM
ADDED : டிச 17, 2025 08:10 AM

சென்னை:
பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கல்விக்கடன்களில் வாராக்கடன் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதம், 2024-25 நிதியாண்டில் 2 சதவீதமாக குறைந்துள்ளது.
இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின் படி, ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படும் கல்விக்கடன்களுக்கு பிணையம் தேவையில்லை. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7.50 லட்சத்தை மீறியும் பிணையில்லா கல்விக்கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. இதனால் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் ஏற்படும் பொருளாதார தடைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டம் மூலம், தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு எளிய, வெளிப்படையான முறையில் பிணையமில்லா மற்றும் உத்தரவாதமில்லா கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன. வாராக்கடன்களை கட்டுப்படுத்த வங்கிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

