மருத்துவப் படிப்புகளில் இடங்கள் உயர்வு: மத்திய அமைச்சர்
மருத்துவப் படிப்புகளில் இடங்கள் உயர்வு: மத்திய அமைச்சர்
UPDATED : டிச 17, 2025 08:11 AM
ADDED : டிச 17, 2025 08:11 AM

சென்னை:
நாட்டில் மருத்துவக் கல்விக்கான இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) வழங்கிய தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, 2020-21 கல்வியாண்டு முதல் 2025-26 கல்வியாண்டு வரை இளநிலை மருத்துவப் படிப்புகளில் 48,563 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 29,080 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 2025-26 முதல் 2028-29 நிதியாண்டு வரை மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில், 2025-26 கல்வியாண்டில் மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 7,619 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுபிரியா படேல் கூறினார். இந்த நடவடிக்கை மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க உதவும் எனவும் அவர் விளக்கினார்.

