திறன் மேம்பாட்டு பல்கலை அமைக்க வேண்டும்; முதல்வரிடம் கொடிசியா வலியுறுத்தல்
திறன் மேம்பாட்டு பல்கலை அமைக்க வேண்டும்; முதல்வரிடம் கொடிசியா வலியுறுத்தல்
UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 02:58 PM
கோவை:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் மிகு மனிதவளத்தை பெறும் வகையில், திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என, முதல்வரிடம் கொடிசியா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொழில்துறை மேம்பாட்டுக்காக இரு கருத்துருக்களை முன்வைத்தோம். முதலாவதாக, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் கூரை மற்றும் தரையில் 112 கிலோ வாட் வரை சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவது.
இதன்படி, 112 கிலோவாட் வரை நிறுவப்படும் சோலார் அமைப்புகளில், பாதுகாப்பு சான்றிதழ் கட்டணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் உற்பத்தி அளவீட்டு மீட்டர்களை பொருத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
எவ்வித பிணையும் இன்றி 7 சதவீதம் எனும் குறைந்த வட்டி விகிதத்தில் ஏழு ஆண்டுகளுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்தும் வகையில் கடன் வழங்க வேண்டும்.
ஒரு கிலோ வாட் முதல் 112 கிலோவாட் வரை சோலார் அமைப்பை நிறுவும் தொழிற்சாலைகளுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்பட வேண்டும். 112 கிலோவாட் வரை, சோலார் அமைப்புகளுக்கு வசூலிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் தவிர்க்கப்பட வேண்டும் என, தெரிவித்துள்ளோம்.
அடுத்து, திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும் எனவும் கோரியுள்ளோம். இத்திட்டம் தொழில்துறைக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
திறன் மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும்.
ஊரக மேம்பாட்டுத் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் துறைசார்ந்த தொழில் அமைப்புகள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவதன் வாயிலாக, இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை உருவாக்க முடியும்.
இந்த இரு கருத்துருக்கள் தவிர, கோவைக்கான மாஸ்டர் பிளான், தொழில் அனுமதியை விரைவுபடுத்துவது, உள்கட்டமைப்பு, சாலைகள் விரிவாக்கம், அவிநாசி ரோடு மேம்பால நீட்டிப்பு, ஜி.எஸ்.டி., சிக்கல் தொடர்பாகவும் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நீடிக்கும் மின் கட்டண பிரச்னை
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில், முதல்வரிடம் கொடுக்கப்பட்ட மனு:மாதாந்திர நிலைக்கட்டணம் கிலோவாட்டுக்கு 35 ரூபாயில் இருந்து, 160 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை திரும்பப் பெற வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். 12 கிலோவாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, 3பி.,யில் உள்ள மின் இணைப்புகளை 3ஏ1க்கு மாற்றிக் கொடுக்க ஆணை பிறப்பித்தும் நடைமுறைப்படுத்தவில்லை.
தாங்களாக முன்வந்து மாற்றுவதில் சிக்கல் உள்ளதால், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு சாப்ட்வேரில் மாற்றம் செய்து, உடனடியாக 3ஏ1 இணைப்புக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.18 கிலோவாட் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு முன்னறிவிப்பு இன்றி, 'பவர்பேக்ட்' கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக குறுந்தொழில் முனைவோரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, 18 கிலோவாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு பவர்பேக்ட் திரும்பப் பெறும்படி உத்தரவிட வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.