தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புதுச்சேரியில் இரு நாள் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது

புதுச்சேரியில் இரு நாள் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது

புதுச்சேரியில் இரு நாள் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது


UPDATED : மார் 30, 2025 12:00 AM

ADDED : மார் 30, 2025 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 30, 2025 12:00 AM ADDED : மார் 30, 2025 08:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தினமலர் நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று துவங்கியது. முதல்நாளில் பெற்றோர்களுடன் குவிந்த மாணவர்கள் கல்வியாளர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.

என்ன படித்தால் எதிர்காலத்தில், தங்கள் பிள்ளைகள் வளமுடன் இருப்பர் என்பதே, இன்றைய பெற்றோரின் தேடலாக உள்ளது. பெற்றோர், மாணவர்களின் எதிர்கால தேடலுக்கு, கல்வியாளர்களின் துணையுடன் துல்லியமான வழியை தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சி வாயிலாக காட்டி வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் மெகா கல்வி திருவிழாவான இரண்டு நாள் வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரி சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கியது.

அசத்தல் அரங்குகள்


வழிகாட்டி நிகழ்ச்சியின் கண்காட்சி ஸ்டால்களை கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் பென்ரூபன், கோவை எஸ்.என்.ஆர்., மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கல்வியாளர்களுடன் அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

வழிகாட்டி கருத்தரங்கினை மத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் பென்ரூபன், எஸ்.என்.ஆர்., மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன், இந்திய பட்டய கணக்காளர் நிறுவன ஆடிட்டர் சந்தியா, கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாணவர்கள் ஆர்வம்


வழிகாட்டி நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காலை 8.30 மணி முதல், ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ஸ்டால்களாக சென்று பார்வையிட்டனர். ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கின்றன. அங்குள்ள வசதிகள், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அலைச்சலின்றி தெரிந்து தெளிவு பெற்றனர்.

கருத்தரங்கம்


வழிகாட்டி நிகழ்ச்சியில் தொடர்ந்து முற்பகல் மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளிலும் கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. காலை 10 மணி முதல் 12.30 மணிரை நடந்த முதல் அமர்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் பென்ரூபன், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றியும், மத்திய டி.ஆர்.டி.ஓ., ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற தலைப்பிலும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவன ஆடிட்டர் சந்தியா எதிர்கால சி.ஏ., வணிகவியல் படிப்புகளில் வாய்ப்புகள் குறித்தும், கோவை ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி பேராசிரியர் ஆனந்தகுமார், புதிய தொழில்நுட்ப படிப்புகள் குறித்து பேசினர்.

சென்டாக் கவுன்சிலிங்


மாலை 3 மணிக்கு துவங்கிய இரண்டாம் அமர்வில் சென்டாக் படிப்புகள், அட்மிஷன் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சேரி இந்திரா கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியரான சென்டாக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் யமுனாராணி, வில்லியனுார் கஸ்துார்பா மகளிர் கல்லுாரி உதவி பேராசிரியரான சென்டாக் குறை தீர்வு அதிகாரி விவேகானந்ததாசன் விளக்கம் அளித்தனர்.

கல்வியாளர்கள்


சென்னை சோகோ நிறுவன முதன்மை மனித வள மேம்பாட்டு அதிகாரி சார்லஸ் காட்வின் வேலைவாய்ப்பு திறன்கள் பற்றியும், பிரபல கல்வியாளர் ரமேஷ்பிரபா உடனடி வேலை அளிக்கும் படிப்புகள் குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.

நிரம்பி வழிந்த அரங்குகள்


கல்வியாளர்களின் கருத்துகளை கேட்க பெற்றோர், மாணவர்கள் கூடியதால் நேற்று அரங்கு நிரம்பி வழிந்தது. மாணவர்கள், கல்வியாளர்கள் வழங்கிய குறிப்புகளை எழுதிக்கொண்டதுடன், தங்களுடைய மொபைல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். வெளியூர் சென்றுள்ள மாணவர்களுக்கு பதிலாக அவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். கல்வியாளர்கள் வழங்கிய கருத்துகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து சிலர் நேரடியாகவும் கல்வியாளர்களை அணுகி சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று திருப்தியடைந்தனர். அத்துடன் உயர் கல்வி தொடர்பான ஸ்டால்களை பார்வையிட்டு. அட்மிஷன் தகவல்களையும் பெற்றனர்.

பொது அறிவு போட்டி


நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தினமலர் நாளிதழ் சார்பில், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, சரியான விடை எழுதியவர்களுக்கு, லேப்டாப், வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டன. ஆர்வமாக பங்கேற்ற மாணவ மாணவிகள் அசத்தலாக பதிலளித்து ஒரு லேப்டாப், 2 டேப்லெட்,10 வாட்சுகள் என 13 பரிசுகளை தட்டி சென்றனர்.

இன்று 30ம் தேதியுடன் நிறைவு பெறும் இந்த வழிகாட்டி கண்காட்சியில் உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எவை, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும். மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைத்து துறைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.

நுழைவு தேர்வு


நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், கிளாட், நாட்டா, கேட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது. அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ.,-ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பி தெளிவு பெறலாம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் பெறலாம். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இந்த மெகா கல்வித்திருவிழா ஓர் அரிய வாய்ப்பு.

அனுமதி இலவசம்


வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 30 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பார்வையிடலாம். கருத்தரங்கில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

இணைந்து வழங்குவோர்


இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ருசி பால் நிறுவனம், எஸ்.மீடியா சேனல், அக்குவாகீரின் குடிநீர், 92.7 பிக் எப்.எம்., ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

இன்றைய அமர்வில் கல்வியாளர்கள்


தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாம் நாள் காலை அமர்வில் சென்னை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரசன்னகுமார், ஐ.டி., கம்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்தும், மகேந்திரா அண்ட் மகேந்திரா டெக்னோ இன்னோவேஷன் துணை தலைவர் சங்கர் வேணுகோபால் பேசுகின்றனர்.தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் வேலைக்கான திறன்கள், கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி எதிர்கால இன்ஜினியரிங் படிப்புகள் குறித்தும், மதுரை சுப்பலட்சுமி அறிவியல் கல்லுாரி மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை தலைவர் சுரேஷ்குமார், மரைன் கேட்டரிங் ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர்.மாலை நடக்கும் இரண்டாம் அமர்வு கருத்தரங்கில் வங்கியாளர் விருத்தாசலம் வங்கி கடன் பற்றியும், கல்வியாளர்கள் அரவிந்த் சர்வதேச நிதி சார்ந்த படிப்புகள் பற்றியும், அஸ்வின் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வு பற்றியும் விளக்கம் அளிக்கம் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us