கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
UPDATED : ஜன 19, 2026 08:58 AM
ADDED : ஜன 19, 2026 09:00 AM
சென்னை:
'உயர் கல்வி நிறுவனங்களில், அனைத்து சமூகங்களும் உள்ளடக்கிய சமத்துவ குழுவை உருவாக்க வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
பல்கலை, கல்லுாரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், மதம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் பாகுபாடுகளை ஒழிக்க, புதிய ஒழுங்குமுறைகள், யு.ஜி.சி.,யால் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து கல்லுாரிகளிலும், 'சமத்துவ குழு' அமைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், கல்வி நிறுவனத்தின் தலைவரே, தலைவராக செயல்படுவார்.
உறுப்பினர்களாக, மூன்று பேராசிரியர்கள், ஒரு பணியாளர், இரண்டு தன்னார்வலர்கள், கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இரண்டு மாணவர்கள் இடம்பெறுவர்.
பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இக்குழு, ஆண்டுக்கு இரண்டு முறை கூடி, கல்வி நிறுவனங்களில் நிலவும் சமத்துவம் குறித்து விவாதித்து, புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
அதன் அறிக்கையை, 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் இந்த உத்தரவு, கல்வியாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
'கல்வி வாயிலாக அறிவையும், ஒழுகத்தையும் கற்றுத் தந்து, ஜாதி, மதம், இன உணர்வை ஒழிக்க வேண்டிய பொறுப்பு, யு.ஜி.சி.,க்கு உண்டு.
அதை மறந்து, மீண்டும் கல்வி நிறுவனங்களில் ஜாதியை புகுத்தி, பாகுபாட்டை வளர்க்கும் விதமாக, சமத்துவக் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடுவது சரியா' என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

