UPDATED : மார் 27, 2025 12:00 AM
ADDED : மார் 27, 2025 01:44 PM
புதுடில்லி:
மொபைல் போன் வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் யு.பி.ஐ., செயலிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மணி நேரம் முடங்கின.
யு.பி.ஐ., என்பது நம் நாட்டில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை எளிதாகவும், விரைவாகவும் செய்ய உதவும் தொழில்நுட்ப வசதி. வங்கிக் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்து அதை, 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற யு.பி.ஐ., அடிப்படையிலான மொபைல் செயலிகளில் இணைத்து பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.
யு.பி.ஐ., செயலிகளை பயன்படுத்தி தினசரி 70,000 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடக்கின்றன. இந்நிலையில் நேற்று மாலை 4:00 மணி முதல் இந்த செயலிகளை பயன்படுத்துவோர் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர்.
இரவு 8:00 மணி வரை ஆயிரக்கணக்கானோர் பணம் அனுப்ப முடியவில்லை என, டவுன் டிடெக்டர் தளத்தில் புகாரளித்தனர். அதன் பின் யு.பி.ஐ., வசதி வழக்கம் போல் இயங்கியது.
இது குறித்து யு.பி.ஐ., தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், என்.பி.சி.ஐ., சில மணி நேர தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக யு.பி.ஐ., பயனர்களின் ஒரு பகுதியினர் பிரச்னையை சந்தித்தனர். சிக்கல் நிவர்த்தி செய்யப்பட்டு, அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம் என கூறியுள்ளனர்.