யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து
UPDATED : மார் 09, 2026 11:47 AM
ADDED : மார் 09, 2026 11:50 AM
புதுச்சேரி:
யு.பி.எஸ்.சி., தேர்வில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல் டாக்டர் வைகவி 306வது தரவரிசை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சின்னகாலாப்பட்டு நேதாஜி தெருவைச் சேர்ந்த இவர், புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல் மருத்துவ பட்டம் பெற்றார். அதே மருத்துவமனையில் ஓராண்டு துணை நிலை பல் மருத்துவராக பணியாற்றினார். ஆங்கில இலக்கியத்தை முக்கியப் பாடமாகத் தேர்வு செய்து, இரண்டாவது முயற்சியில் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார்.
வைகவி, புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத் துறை பேராசிரியருமான வேலு சரவணன் - முத்துலெட்சுமி தம்பதியரின் மகள். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தியில், புதுச்சேரியை சேர்ந்த வைகவி யு.பி.எஸ்.சி., தேர்வில் தேசிய அளவில் 306வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என, தெரிவித்துள்ளார்.
வைகவி கூறுகையில், “இந்த வெற்றி என் பெற்றோர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் பலனாகும். செய்தித்தாள்கள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை படித்து பயிற்சி பெற்றேன். தெளிவான இலக்கு, திட்டமிட்ட உழைப்பு, பொறுமை இருந்தால் எந்த சாதனையும் சாத்தியமே. தோல்விகளை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். ஐ.எப்.எஸ்., எடுத்து உலகளாவிய மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்,” என்றார்.

