UPDATED : ஜன 05, 2025 12:00 AM
ADDED : ஜன 05, 2025 08:37 AM

சென்னை:
குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து நிலைப்போட்டி தேர்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், தமிழ்நாடு அனைத்து நிலைப்போட்டி தேர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் கலீல்பாஷா, செயலர் திருக்குமரன், பொருளாளர் கோபிநாத் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை, 49 ஆக உயர்த்த வேண்டும். குரூப் 2 முதன்மை தேர்வை கொள்குறி முறையில் நடத்த வேண்டும். அரசு பணிகளில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு ரத்தாகும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.