UPDATED : ஜன 05, 2025 12:00 AM
ADDED : ஜன 05, 2025 08:38 AM

சென்னை:
பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக, வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும், 14ம் தேதி செவ்வாய் கிழமை, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 15, 16, 18, 19ம் தேதிகள் அரசு விடுமுறை நாட்கள்.
எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அரசு அலுவலர்கள் சொந்த ஊருக்குச் சென்று, பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், இடைப்பட்ட நாளான 17ம் தேதி வெள்ளிக் கிழமை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு, பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
அதையேற்று, 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, தமிழகம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதில், 25ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 நாட்கள் விடுமுறை
வரும் 11ம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பதால், அன்றிலிருந்தே பொங்கல் விடுமுறை துவங்குகிறது. வரும் 13ம் தேதி போகி பண்டிகைக்கு அரசு விடுமுறை இல்லை என்றாலும், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விடும்.
அதனால், அன்று அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்படாது. இப்போது, ஜனவரி 17 வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஜனவரி 11 முதல் 19 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.