மருந்துகளின் பெயர்களை புரியும்படி எழுதுங்கள்; டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்
மருந்துகளின் பெயர்களை புரியும்படி எழுதுங்கள்; டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்
UPDATED : டிச 16, 2025 09:04 PM
ADDED : டிச 16, 2025 09:05 PM

சென்னை:
'நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தெளிவாக, பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்' என, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, அனைத்து மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கும், என்.எம்.சி., செயலர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'மருந்து பரிந்துரை சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை, மருத்துவ பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம்' என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், தேசிய மருத்துவ ஆணையம், சில முக்கிய முடிவுகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிகளிலும், மருந்து சீட்டு நடைமுறைகளை கண்காணிக்க சிறப்பு துணைக்குழு அமைக்க வேண்டும்.
அந்த குழுவானது, நோயாளிகளுக்கு எழுத்துப்பூர்வமாக டாக்டர்கள் வழங்கும் மருந்து பரிந்துரைகள் தெளிவாக உள்ளதா என்பதை மதிப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
துணைக்குழு முன்னெடுக்கும் இப்பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்துவதுடன், அவற்றை தேசிய மருத்துவ ஆணையம் கேட்கும்போது, சமர்ப்பிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மூலப்பெயருடன் கூடிய மருந்துகளின் பெயர்களை, புரியும்படி பெரிய எழுத்துகளில் டாக்டர்கள் பரிந்துரைப்பது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

