இளைஞர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்: சுதா சேஷய்யன்
இளைஞர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்: சுதா சேஷய்யன்
UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 07:58 AM
சென்னை:
மதுரை ஸ்ரீ கிருஷ்ணா பவுண்டேஷன் மற்றும் தேஜஸ் பவுண்டேஷன் சார்பில், ஆன்மிக இலக்கிய நுால்கள் பரிசளிப்பு விழா, ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.
ஆன்மிக இலக்கிய எழுத்தாளர்கள், வித்யா சுப்பிரமணியம், பேராசிரியர் பத்மினி, கவிஞர் கதிரேசன், பாலகிருஷ்ணன், மா.கி.ரமணன், பிரபு சங்கர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தும் வசதி உள்ளது. இணையதளம் வாயிலாக படிப்பதற்கும், புத்தகத்தின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வதற்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன.
இணையதளத்தில் நமக்கு வேண்டிய, குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே, நாம் பெற முடியும். புத்தகங்கள் கொடுக்கும் தகவல்களை இணையதளம் கொடுப்பதில்லை.
முழுமையான மற்றும் ஆழமான அறிவு, புத்தகங்களில் இருந்து கிடைக்கிறது. ஒரு தகவல் சார்ந்த 360 டிகிரி தகவல்களையும், புத்தகங்களின் வாயிலாக மட்டுமே பெற முடியும். எனவே, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் இடையே அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசுகையில், பக்தி இல்லை என்றால், தமிழ் இலக்கியத்திற்கு வேலையே இல்லை. தமிழ் இலக்கியம் செழிப்பாக இருக்க, பக்தி இலக்கியம் கட்டாயம் தேவை. அதே போல், சரியான பாதையில் சமூகத்தை அழைத்து செல்லும் நூல்களுக்கும், இலக்கியங்களுக்கும், முக்கியத்துவம் தர வேண்டும், என்றார்.