எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி; 35 ஆண்டுக்கு முன் பிரிந்த சகோதரர்கள் இணைந்தனர்
எஸ்.ஐ.ஆர்., பணி எதிரொலி; 35 ஆண்டுக்கு முன் பிரிந்த சகோதரர்கள் இணைந்தனர்
ADDED : செப் 06, 2026 08:25 PM

ஜிந்த்: ஹரியானாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தன் குடும்பத்தினருடன் சீதா ராம், 55, என்ற மாற்றுத்திறனாளி இணைந்துள்ளார்.
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மனோஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா ராம். சிறுவயதிலேயே போலியாவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான சீதாராமை, பஞ்சாபின் சங்ரூரில் உள்ள போலியோ சிகிச்சை மையத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஒரு மாதத்துக்கு பின் அவரை பார்க்க சென்ற போது, சீதா ராம், அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
பல ஆண்டுகளாக தேடியும் சீதாராம் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பஞ்சாபின் அமிர்தசரசில் அரசு பணியில் சேர்ந்த அவர் அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, தன் படிப்பு சான்றிதழ் தேவைப்பட்டதால், மனோஹர்பூரில் உள்ள தான் படித்த பள்ளிக்கு சீதாராம் சென்றார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ரமேஷ் குமார், அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்குமாறு, மனோஹர்பூரைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அதிகாரி கிருஷன் குமாரிடம் தெரிவித்தார். தன் மூத்த சகோதரர் பல்பீர் மனோஹர்பூரில் வசிப்பது குறித்து அவரிடம் சீதாராம் கூறியுள்ளார்.
கிருஷனுக்கு பல்பீரை ஏற்கனவே தெரிந்திருந்ததால், சீதாராம் வந்திருப்பது குறித்து அவரிடம் போனில் தெரிவித்தார். மாயமான தன் சகோதரர், பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த பல்பீர் உடனடியாக அங்கு சென்றார். 35 ஆண்டுகளுக்கு பின் தம்பியை சந்தித்த பல்பீர், கண்ணீருடன் அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.
