எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்; பல மசோதாக்களை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்; பல மசோதாக்களை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
ADDED : ஆக 03, 2026 07:50 PM

- நமது சிறப்பு நிருபர் -
பார்லி.,யில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும் பல மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், முதலிரண்டு வாரங்களில் லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் குறிப்பிடும்படியான அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதமே நடந்தது. இந்த மசோதா பல மணி நேர விவாதத்துக்கு பின், இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று, லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மாணவர்கள் மீதான தடியடி, பெல்லட் குண்டுகள் பயன்பாடு ஆகியவற்றுக்கு பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன.
இந்த கூச்சல், குழப்பத்துக்கு இடையிலும், லோக்சபாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் அறிமுகம் செய்தார். இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதி நீங்கலாக, 33ல் இருந்து 37 ஆக அதிகரிக்கப்படுகிறது. குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
இது தவிர, வங்கித் துறை மற்றும் இந்திய புள்ளிவிபர நிறுவனத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் இரண்டு மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய புள்ளிவிபரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், இந்திய புள்ளிவிபர நிறுவன மசோதா - 2026ஐ லோக்சபாவில் அறிமுகப்படுத்தினார். இந்திய புள்ளிவிபர நிறுவன சட்டம் - 1959க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
நிர்வாகத்தை வலுப்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், துறையின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. ஜனாதிபதி இந்நிறுவனத்தின் பார்வையாளராக இருப்பார் என்றும், அதன் முதன்மை கொள்கை மற்றும் நிர்வாக அமைப்பாக கவர்னர்கள் குழு செயல்படும் என்றும் மசோதா கூறுகிறது. நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வளாகங்களையும், மையங்களையும் நிறுவவும், பட்டங்கள் மற்றும் கவுரவ பட்டங்களை வழங்கவும் இந்நிறுவனத்திற்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
பதிலளிக்க வேண்டும்!
டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்தும், பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது குறித்தும் அமித் ஷா பார்லி.,யில் பதிலளிக்க வேண்டும். பிரதமரின் மேற்பார்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை இயங்கிய போதும், அங்கு நன்கொடை திருட்டு நடந்துள்ளது. இது குறித்து பார்லி.,யில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்- மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ்
