தனி ஒருவனாக ஆற்றை சுத்தம் செய்யும் ம.பி., மாணவர்: பாராட்டு குவிகிறது
தனி ஒருவனாக ஆற்றை சுத்தம் செய்யும் ம.பி., மாணவர்: பாராட்டு குவிகிறது
ADDED : செப் 03, 2026 06:23 PM

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் அசுத்தமாக இருந்த நதியை தனி ஒருவனாக சுத்தம் செய்து பலரின் பாராட்டை பெற்று உள்ளார்.
மபியின் ராஜ்கர் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதியாக அஜ்னார் நதி விளங்குகிறது. அம்மாவட்டத்தின் பயோரா நகரின் முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. தொழிற்சாலை கழிவுகள், நகர்ப்புற கழிவுகள் கலந்த இந்த நதி மாசுபட்டது. மேலும் பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதனைக் கண்ட பயோரா பகுதியைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது மாணவர் அந்த நதியை சுத்தப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார். அதற்கு தேவையான பொருட்களை தனது சொந்தப் பணத்திலேயே வாங்கி உள்ளார்.
நதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை, கையுறை அணிந்து அகற்றியுள்ளார். குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் பல இடங்களில் அந்த நதி தூய்மையாகக் காணப்படுகிறது.
இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, ஒரு விவாதத்தை அது ஏற்படுத்தியது.பொது இடங்களையும், ஆறுகளையும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டியது யார் பொறுப்பு? யார் பொறுப்பாக வைத்திருக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பினர்.
உள்ளாட்சி அமைப்புகளிடம் மேற்கொள்வதற்கான வளங்களும் பொறுப்புகளும் உள்ள ஒரு வேலையை தனி நபர் ஒருவர் செய்வதாக பலர் தெரிவித்தனர். பலர் பல வகையான கருத்துகளை கூறினாலும் அந்த மாணவரை பாராட்டி வருகின்றனர்.
அதேநேரத்தில் ஒரு சிலர் பிட்டு தபாஹியை விமர்சிக்கவும் செய்தனர். உண்மையில் நதியை சுத்தம் செய்யாமல், சுத்தப்படுத்துவது போன்று வீடியோ எடுத்து வைரல் செய்வதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து சமூக ஊடகத்தில் பிட்டு தபாஹி அளித்த விளக்கத்தில் எப்படி அந்த நதியை சுத்தம் செய்தது குறித்தும், எத்தனை நாட்கள் ஆனது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
