காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
காபி பாக்கெட்டில் ரூ.47 கோடி கோகைன்… பெண் உள்பட 5 பேர் கைது
ADDED : நவ 01, 2025 03:03 PM

மும்பை: கொழும்புவில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானப் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்ததில், 9 காபி பாக்கெட்டுகளில் கோகைன் கடத்தி வந்தது தெரிய வந்தது.
சுமார் 4.7 கிலோ எடை கொண்ட இந்த கோகைனின் மதிப்பு ரூ.47 கோடியாகும். இதைத் தொடர்ந்து, இந்தப் போதைப் பொருளை எடுத்து வந்த பெண் பயணி, இவரை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்த நபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

