கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
ADDED : அக் 31, 2025 04:48 PM

மதுரை: '' கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது,'' என ஐகோர்ட் மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கரூர் வெண்ணைமலை பாலசுபரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' எனக்கூறியிருந்தார்.
இதனை  நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,''  பல ஆண்டுகளாக இதேபோன்ற பதிலைத் தான் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வழக்கில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா ரத்து யெ்து இருந்தாலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  பட்டா ரத்து செய்து இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் எந்தவிதமான தடையும் இல்லை. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை  அகற்றுவதற்கு யார் தடையாக இருந்தாலும், அச்சுறுத்தலாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தயக்கம் கொள்ளாது.  கோவில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும். கரூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும்,'' என உத்தரவிட்டனர்.

