2026ல் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
2026ல் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
UPDATED : டிச 10, 2025 02:08 PM
ADDED : டிச 10, 2025 01:45 PM

சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: தீய சக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காக, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை கட்சியை கட்டி காத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு வாரிசு இல்லை. நாட்டு மக்களை தான் வாரிசாக பாரத்தார்கள். எண்ணற்ற திட்டங்களை கொண்டு வழங்கிய காரணத்தினால் தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
210 தொகுதிகளில்…!
மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதனை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தினோம். இளைஞர்கள் ஆதரவை இழந்ததால், தேர்தலை மனதில் வைத்து இப்போது தான் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.
மக்களின் செல்வாக்கு, இளைஞர்களின் செல்வாக்கை முதல்வர் ஸ்டாலின் இழந்துவிட்டார். தோல்வி பயம் வந்துவிட்டதால், அவசர அவசரமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். தமிழக மக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஓட்டளிப்பார்கள்.
ஒரு குறை சொல்ல முடியுமா?
பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்பதை தாண்டி, அதிமுகவை நோக்கி என்ன சொல்ல முடியும்? அதிமுக ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஒரு குறை சொல்ல முடியுமா? அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை. தேர்தலை மனதில் வைத்தே மேலும் 30 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாக சொல்கின்றனர்.
41.33 சதவீதம்
2024ல் அதிமுக- பாஜ கூட்டணி 41.33 சதவீத ஓட்டுக்கள் பெற்றது. 43 சட்டசபை தொகுதிகளில் 2 லட்சம் ஓட்டுக்களால் நாம் ஆட்சியை இழந்தோம் என்று பல தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுக பற்றி தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அதிமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளை காகிதம்
இன்று திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை; அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறக்கின்றனர். பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கப்பட்டதாக பொய்யை பேசி, பேசி திமுக உண்மையாக்க பார்க்கிறது. தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் பற்றி கேட்டால் அமைச்சர் வெள்ளை காகித்தை காட்டுகிறார்.
அடிமையில்லை
பாஜவிற்கு நாங்கள் அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். அதிமுக யாருக்கும் எப்போதும் அடிமையாக இருந்தது இல்லை. காங்கிரஸ் இடம் அடிமையாக இருந்தது திமுக தான். காங்கிரஸ் தந்த கூட்டணி அழுத்தத்துக்கு பணிந்தது யார்? கருணாநிதி சொத்தாகிவிட்டது திமுக. திமுக இன்று கார்பரேட் கட்சியாகி விட்டது. துரைமுருகனை ஏன் துணை முதல்வர் ஆக்கவில்லை? திமுகவை போல் அல்ல அதிமுக. அதிமுக தொண்டர்களின் கட்சி. விசுவாசமாக உழைப்போருக்கு தேர்தலில் வாய்ப்பு உள்ளது. அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.
ரூ.5 ஆயிரம் கொடுங்கள்
அதிமுக ஜனநாயக இயக்கம். உச்சபட்ச பதவிக்கு வர முடியும். அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கினோம். வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அதிமுக பலமான கட்சி. வலுவான கூட்டணியை அமைக்கும். தேர்தல் அறிவிப்பு வந்ததும் நல்ல கூட்டணி அமையும். கவலைப்படாதீர்கள். கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

