அல் பலாஹ் பல்கலை தலைவருக்கு சம்மன்; மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் வழக்கு
அல் பலாஹ் பல்கலை தலைவருக்கு சம்மன்; மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் வழக்கு
ADDED : நவ 18, 2025 04:49 AM

புதுடில்லி: பரிதாபாத் பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவத் அகமது சித்திக்கியிடம் விசாரணை நடத்த, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகும்படி அவருக்கு இரு சம்மன்களை அனுப்பியுள்ளனர்.
டில்லி செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபி தான் வெடி பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரியவந்தது.
ஆய்வு மேலும், அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், கைதானவர்கள் அனைவரும் பரிதாபாத் அல் பலாஹ் பல்கலையை சேர்ந்தவர்கள் என்பதால், அதன் தலைவரிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.
பல்கலையின் செயல்பாடு, அதில் பணிபுரிவோர், டாக்டர்களாக பயிற்சி பெறுபவர்களின் பின்னணி, நிதி பரிவர்த்தனைகள், நிர்வாக ஒப்புதல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளனர்.
எனவே, விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு, அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவத் அகமதுவுக்கு, இரு சம்மன்கள் அனுப்பப்பட்டுஉள்ளன.
தலைமறைவு மேலும், பல்கலை மானியங்கள் கமிஷனும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலும் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில், அல் பலாஹ் பல்கலைக்கு எதிராக மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்கலையின் அங்கீகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகி இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அல் பலாஹ் பல்கலையின் அங்கீகார ஆவணங்கள் போலியானவை என தெரியவந்துள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே போலி தனியார் வங்கி துவங்கி, முதலீடுகளை இரட்டிப்பாக்குவதாக பொய் வாக்குறுதி அளித்து, நுாற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில், அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவத்தின் சகோதரர் ஹமூத் அகமதுவை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு, அம்மாநிலத்தின் மோவ் பகுதியில் முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டு, 25 ஆண்டுகளாக, இவர் ஹைதராபாதில் தலைமறைவாக இருந்துஉள்ளார்.
விசாரணை ஜாவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, சகோதரர் ஹமூத் பற்றியும் தெரியவந்ததால், பழைய வழக்கை போலீசார் துாசி தட்டினர்.
அப்போது தான், ஹைதராபாதில் தங்கியிருந்த ஹமூத் அகமது பிடிபட்டார்.
தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், பின்னணியில் இருந்து இவரை இயக்கியவர்கள் யார் என்பது குறித்து மத்திய பிரதேச போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

