மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: தண்ணீர் டம்ளர் சோதனை வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்
மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: தண்ணீர் டம்ளர் சோதனை வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்
ADDED : டிச 30, 2025 10:26 PM

புதுடில்லி: மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நடந்த சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதி நவீன சொகுசு வசதி கொண்ட இந்த ரயில்கள் ஏசி வசதி, பயோ டாய்லட், தானியங்கி கதவு என பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. பயணிகள் மத்தியில் வரவேற்பு கொண்ட இந்த ரயில்கள் இருக்கை வசதி மட்டுமே உள்ளது. வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்தன. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. நீண்ட தூர இரவு நேரப் பயணத்திற்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதற்காக நடந்த சோதனை ஓட்டத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, சமூக வலைதளத்தில், அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்கிறது. ரயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர், ஆடாமல் அசையாமல் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது.இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் சோதனை செய்யப்பட்டது. இது கோட்டா- நாக்டா பிரிவுக்கு இடையில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்டது. டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர், ஆடாமல் அசையாமல் இருந்தது ரயிலின் புதிய தொழில்நுட்ப அம்சங்களை நிரூபித்தது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

