போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் ரூ.70 கோடிக்கு வரி ஏய்ப்பு?
போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் ரூ.70 கோடிக்கு வரி ஏய்ப்பு?
ADDED : டிச 09, 2025 05:27 AM

போடி: போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவரிடம், ஏலக்காய் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம், போ டி நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி கவுன்சிலராகவு ம் உள்ளார்.
சங்கர், தன் மகன் லோகேஷ், நண்பருடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்கிறார். இவர்கள் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரில், மூன்று நாட்களுக்கு முன் வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி., அமலாக்கத்துறை அதிகாரிகள், 50 பேர் கொண்ட குழுவினர், 25க்கும் மேற்பட்ட கார்களில் சங்கரின் வீடு, கிடங்கிற்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் கிடங்கு பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.
நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி, அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் இரவு, 11:00 மணிக்கு மேலும் விசாரணை நடத்தினர். சங்கர் நேற்று மதியம், 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
சங்கரிடம் விசாரித்த அதிகாரிகள், அவரை காரில், திருமலாபுரத்தில் உள்ள அவரது கார் டிரைவர் வடிவேலு வீட்டிற்கு அழைத்து சென்றனர். வடிவேல் அங்கு இல்லாததால் மீண்டும் சங்கரின் வீட்டிற்கு திரும்பினர். பின் துவங்கிய விசாரணை இரவு, 7:00 மணிக்கு மேலும் நீடித்தது.
ஏலக்காய் மூடைகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதில் முறைகேடு செய்து, 70 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

