போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர் உட்பட நால்வருக்கு சிறை
போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர் உட்பட நால்வருக்கு சிறை
UPDATED : செப் 27, 2025 06:09 AM
ADDED : செப் 27, 2025 06:07 AM

மதுரை: மதுரையில், போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட நான்கு போலீசாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை, கோச்சடையை சேர்ந்த ஜெயா என்பவரின், 17 வயது மகன், 2019 ஜன., 24ல் நகை திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.எஸ்., காலனி போலீசாரால் விசாரிக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இது தொடர்பான இழப்பீடு கோரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், சிறுவன் மரணமடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
![]() |
அங்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று பிறப்பித்த உத்தரவு:
சம்பவத்தின் போது எஸ்.எஸ்.காலனி போலீசில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜா, சிறப்பு எஸ்.ஐ., - ஆர்.ரவிச்சந்திரன், ஏட்டு எஸ்.ரவிச்சந்திரன், போலீஸ்காரர் சதீஷ்குமார் குற்றவாளிகள் என, இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் பிரிவின் கீழ் 4 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை, கொலையல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். தலா, 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அருணாச்சலம், எஸ்.ஐ.,க்களாக இருந்த கண்ணன், பிரேம்சந்திரன் மற்றும் விசாரணையில் தெரியவரும் இதர நபர்களை கூடுதல் எதிரிகளாக சேர்த்து உரிய நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.
கண்ணன், பிரேம்சந்திரன் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அருணாச்சலம் பணியில் உள்ளார். விசாரணை பாரபட்சமற்ற முறையில் தொடர, அது முடியும்வரை அவரை டி.ஜி.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இவ்வழக்கை முதலில் விசாரித்த சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜேஸ்வரி எதிரிகளுக்கு உதவும் வகையில் விசாரணையை சரியாக மேற்கொள்ளவில்லை. திட்டமிட்டு குறைபாடுகளுடன் செய்துள்ளதால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி., மேற்கொள்ள வேண்டும்.
சிறுவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்து, வெளிக்காயங்கள் இல்லை என தவறாக குறிப்பிட்டு விபத்து பதிவேடு வழங்கிய மதுரை அரசு மருத்துவமனையில் 2019ல் டாக்டராக பணிபுரிந்த ஜெயக்குமார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் சட்டவிரோதமாக எஸ்.ஐ.,யிடம் ஒப்படைத்த மருத்துவமனை நிலைய மருத்துவராக பணிபுரிந்த லதாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மருத்துவக் கல்வி இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.