லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது கனடா
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது கனடா
ADDED : செப் 30, 2025 03:51 AM

ஒட்டாவா: நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கொலை, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாபை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் சர்வதேச அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில், சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட பாபா சித்திக் கொலை வழக்கிலும், ஹிந்தி நடிகர் சல்மான் கான் வீட்டு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
அதேபோல், வட அமெரிக்க நாடான கனடாவில், 2023ல் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கிலும் இந்த கும்பலுக்கு தொடர்பிருப்பது உறுதியானது.
இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோயை பயங்கரவாதியாகவும், அவரின் கும்பலை பயங்கரவாத அமைப்பாகவும் கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிஷ்னோய் கும்பல், பயங்கரவாதம், வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்காக சில குறிப்பிட்ட சமூகங்களை இலக்கு வைத்துள்ளது.
'எனவே, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சமூகத்துக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.