லாலு குடும்பத்தில் குழப்பம்; காங்கிரஸ் கூட்டணியில் அச்சம்
லாலு குடும்பத்தில் குழப்பம்; காங்கிரஸ் கூட்டணியில் அச்சம்
ADDED : செப் 28, 2025 07:11 AM

பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு பிறந்தவர்கள் ஒன்பது பேர். இரண்டு மகன்கள், ஏழு மகள்கள். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தனிக் கட்சி துவங்கிவிட்டார்.
இளைய மகன் தேஜஸ்வி யாதவ். இவர் முன்னாள் துணை முதல்வர். தற்போது முதல்வர் வேட்பாளராக இவராகவே தன்னை அறிவித்துக் கொண்டுவிட்டார். லாலுவின் ஏழு மகள்களில் ஒருவரான மிசா பாரதி தீவிர அரசியல்வாதி. ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர். இப்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இன்னொரு மகள் ரோஹிணி. மருத்துவரான இவர், கணவர், கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
'சென்ற ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பீஹாரின் சரன் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.,வின் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் தோற்றுப் போனார். சில மாதங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், தற்போது கட்சியை நடத்தி வரும் தேஜஸ்வி சீட் தர மறுத்துவிட்டார்.
தேஜஸ்வி முதல்வர் பதவியில் அமரக் கூடாது என்பது மூத்த மகன் தேஜ் பிரதாப் மற்றும் மகள் ரோஹிணியின் குறிக்கோள். இதற்கான வேலைகளை இவர்கள் துவங்கிவிட்டனர். இந்த குடும்ப குழப்பத்தால் மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி வந்துவிடுமோ என காங்கிரஸ் அச்சப்படுகிறது.