செல்லாத ரூபாயில் அம்மனுக்கு அலங்காரம்: வருமான வரி சோதனை நடத்த கோரிக்கை
செல்லாத ரூபாயில் அம்மனுக்கு அலங்காரம்: வருமான வரி சோதனை நடத்த கோரிக்கை
ADDED : செப் 28, 2025 06:37 AM

தஞ்சாவூர்: செல்லாத ரூபாய் நோட்டுகளால், பட்டீஸ்வரம், துர்க்கையம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டதற்கு, ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள, துர்க்கையம்மனுக்கு, செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து இருந்தனர்.
'செல்லாத ரூபாய் நோட்டுகளை, ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், அவற்றை வைத்திருந்தது சட்ட விரோதம்' என கோவில் நிர்வாகத்திடம் சிலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'இந்த ரூபாய் நோட்டுகளை சிவாச்சாரியார் ஒருவர் வைத்திருந்தார். அவர் தான், ஒவ்வொரு முறையும் அம்மன் அலங்காரத்திற்கு கொடுப்பார்.
'அதை, கோவில் நிர்வாகம் சார்பில், பயன்படுத்துவர். அப்படித்தான், தற்போதும் நடந்துள்ளது' என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கூறினர்.
மேலும், 'அம்மன் அலங்காரத்துக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியது குறித்து, அறநிலையத் துறை கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது.
'அங்கிருந்து வரும் உத்தரவுப்படி, செயல்படுவோம்' என கோவில் செயல் அலுவலர் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு, அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், புகார் அனுப்பி உள்ளார்.
அதில் 'பட்டீஸ்வரம் கோவிலில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளனர். எனவே, அறநிலையத் துறை அலுவலகங்களில், வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

