விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்: கஸ்துாரி கிண்டல்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்: கஸ்துாரி கிண்டல்
ADDED : டிச 24, 2025 02:59 AM

திருப்பரங்குன்றம்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார்,'' என பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் நான்தான். இன்று திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. 20 நாட்களாக மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பாதையை திறக்கவில்லை. தர்காவில் சந்தனக்கூடு நடக்கிற காரணத்தால் திறந்து விட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம், ஹிந்து நம்பிக்கை, தீபத்துாண் எல்லாவற்றையும் அவமதிக்கிறீர்கள். அதற்கு குரல் கொடுப்பவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கிறீர்கள். தீபம் ஏற்ற இரண்டு பேர் எண்ணெய் வாங்கினால் கூட அரசுக்கு நல்லதுதானே. டாஸ்மாக்கில் மட்டும் பாட்டில் வாங்கணுமா.
கலவரம் வரும் என்று சொன்ன சு.வெங்கடேசனிடம் கேட்கிறேன். இப்போது சந்தோஷமா. ஹிந்து மக்களை கொச்சைப்படுத்துகிறீர்கள்.
மலை மேல் தீபத்துாணில் தீபம் ஏற்ற கோரிக்கை வைத்துவரும் அனைவரும் எந்த கட்சி யிலும் சாராதவர்கள். கிராமத்தினர், பூர்வீக குடியினர். அனைவரும் முருகன் கட்சிதான். எனக்கும் முருகன் தான் குலதெய்வம்.
தீபத்துாணில் தீபம் ஏற்றினால் சோறு கிடைத்து விடுமா என திருமாவளவன் கேட்கிறார். அவர் கட்சியை கலைத்தால் நான் பத்தாயிரம் பேருக்கு சோறு போடுகிறேன். சந்தனக்கூடு கொடி ஏற்றியதால் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்குமா என திருமாவளவன் கேட்பாரா. உங்கள் சீட்டு பேரத்தை போய் பாருங்கள். எங்கள் மத நம்பிக்கையில் தலையிடாதீர்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார், நோன்பு கஞ்சி குடிக்கிறார். நான் அதை தவறு சொல்லவில்லை. அனைவரும் நமது சகோதரர்கள் தான். ஆனால் அந்த சகோதர மனப்பான்மை ஹிந்து என சொன்னால், சனாதனம் என்று கூறினால் ஏன் ஒழிப்போம் என்று கிளம்புகிறீர்கள். இவ்வாறு கூறினார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிய கஸ்துாரி, தீபத்துாண் பிரச்னையில் கைதாகி விடுதலையான 17 பெண்களை சந்தித்தார். உணர்ச்சி மிகுதியால் கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். அனைத்து பெண்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
குடும்பத்தினருக்கு ஆறுதல்
பின்னர் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு சென்றார். அவருடன் நகர் பா.ஜ., தலைவர் மாரிசக்ரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் சென்றனர். பூர்ணசந்திரன் மனைவி, தாயை சந்தித்த அவர், குடும்பத்திற்கு உதவுவதாக தெரிவித்தார்.

