அரசின் இலவச பட்டாவுக்கு ரூ.10,000: தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை
அரசின் இலவச பட்டாவுக்கு ரூ.10,000: தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை
ADDED : டிச 11, 2025 07:04 AM

சேலம்: அரசு வழங்கும் பட்டாவுக்கு, தி.மு.க.,வினர் தலா, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக, அ.தி.மு.க., நிர்வாகி பேசிய ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வளையக்காரனுார் ஊராட்சியில், இரு மாதங்களுக்கு முன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அதில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, 50க்கும் மேற்பட் டோர் மனு அளித்தனர். இதுகுறித்து, வருவாய்த்துறையினர் விசாரித்து, 30 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்தனர்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களை, வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் அளவீடு செய்தனர். ஆனால், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க, தலா, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து, அ.தி.மு .க.,வின் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி இணை செயலர் ஜீவா கார்த்திக், வருவாய்த்துறையினர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, 'அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு, ஏழைகளிடம் எதற்கு, 10,000 ரூபாய் கேட்கிறீர்கள்? தி.மு.க., ஒன்றிய துணை செயலர் செந்தில் உள்ளிட்டோர் பணம் கேட்பதாக கூறுகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன்' எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அவர் பேசிய ஆடியோ, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
மேலும், 'தி.மு.க.,வை சேர்ந்த, அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல், இலவச வீட்டு மனை பட்டாவுக்கு பணம் கேட்பதாகவும், அவரது அராஜக போக்கை கண்டித்து, போராட்டம் நடத்துவோம்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஜீவா கார்த்திக் கூறியதாவது: பட்டா பெறும் பயனாளிகளிடம், தலா, 10,000 ரூபாய் கேட்டுள்ளனர். இது தெரியவர, தி.மு.க., ஒன்றிய செயலர் ரத்தினவேல், கிராம உதவியாளர் உள்ளிட்டோரிடம் கேட்டேன். ரத்தினவேல் கேட்டதாக கூறவில்லை. இங்குள்ள தி.மு.க.,வினர் கேட்பதாக, ஒன்றிய செயலரிடம் கூறினேன்.
நான் பேசிய ஆடியோ பரவியதால், தி.மு.க.,வினர் மொபைல் போனிலும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். பட்டாவுக்கு பணம் வசூலிப்பதை, மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., ஒன்றிய துணை செயலர் செந்தில் கூறுகையில், ''என் மீதும், ஒன்றிய செயலர் மீதும், அ.தி.மு.க., நிர்வாகி அவதுாறு பரப்புவதால் அவர் மீது வீராணம் போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,'' என்றார். தி.மு.க., ஒன்றிய செயலர் ரத்தினவேல் கூறுகையில், ''வளையக்காரனுாரில் பட்டா வழங்க, யாரிடமும் நான் பணம் கேட்கவில்லை. என் மீது தவறான தகவல் கூறி, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீவா கார்த்திக் என்னிடம் பேசும்போது, 'நேரில் வந்து விசாரிக்கிறேன். இப்பிரச்னை குறித்து தெரியாது என்றேன். அவ்வளவு தான்,'' என்றார்.

