வெறுப்பு பேச்சால் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
வெறுப்பு பேச்சால் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
ADDED : ஆக 19, 2026 05:29 PM

நாடியா: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் மஹூவா மொய்த்ரா. அவ்வப்போது பொது மேடைகளிலும், பார்லிமெண்ட் உள்ளேயும் சர்ச்சையான கருத்துகளை பேசி அனைவர் கவனத்தையும் ஈர்ப்பவர்.
ஜுலை 1ம் தேதி தமது தொகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வெளியே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது முட்டைகள், கற்கள் வீசப்பட்டன. அதை விமர்சித்து கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்.
மஹூவா மொய்த்ராவின் விமர்சனம், மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. பலமுறை சம்மன்அனுப்பப்பட்டும் மஹூவா மொய்த்ரா ஆஜராகவில்லை.
மேலும், பார்லி. கூட்டத்தொடர் முடிந்த பின்னர் அவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மேல் முறையீடு செய்துள்ளார்.
இந் நிலையில் பலமுறை சம்மன்கள் அனுப்பியும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கிருஷ்ண நகர் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மஹூவா மொய்த்ரா நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார். ஆஜர் ஆனால் மட்டுமே அதுகுறித்து யோசிக்க முடியும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மஹூவா மொய்த்ரா, முந்தைய பார்லியிலும் உறுப்பினராக இருந்தவர். பார்லியில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்ற புகாருக்கு ஆளான அவர், நெறிமுறைக்குழு உத்தரவுபடி பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.
