வாரிசு அரசியல் என பதிவிட்டு ராகுலை சீண்டினாரா திவாரி?
வாரிசு அரசியல் என பதிவிட்டு ராகுலை சீண்டினாரா திவாரி?
ADDED : செப் 24, 2025 03:17 AM

புதுடில்லி: இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் தொடர்பாக, 'வாரிசு குழந்தைகள்' என்ற 'ஹேஷ்டேக்'கில், காங்., மூத்த தலைவர் மணீஷ் திவாரி வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் சண்டிகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான மணீஷ் திவாரி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
கடந்த 2023 ஜூலையில், இலங்கையில் கோத்தபய ராஜபக்சே, 2024 ஜூலையில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆகியோரின் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. சமீபத்தில், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
தற்போது, தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், அதிபர் பெர்டினாண்ட் மார்கோசுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.
அதிகாரம் இனி ஏற்கப்படாது என்ற பொதுவான செய்தியை, இந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இளம் தலைமுறையினர் வாரிசு அரசியல் கலாசாரத்தை நிராகரிப்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த பதிவை, 'வாரிசு குழந்தைகள், குடும்ப அரசியல்' என்ற 'ஹேஷ்டேக்'கில், மணீஷ் திவாரி வெளியிட்டார்.
இது குறித்து, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், ''காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை குறிவைத்தே மணீஷ் திவாரி இப்படி பதிவிட்டுள்ளார். வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வந்தவர் தான் ராகுல். இது அனைவருக்கும் தெரியும்.
''இளம் தலைமுறையினரை விடுங்கள், ராகுலின் பிற்போக்குத்தனமான அரசியலால் அவரது கட்சி நிர்வாகிகளே சலிப்படைந்து விட்டனர். அதன் எதிரொலி தான் மணீஷ் திவாரி,'' என்றார்.
புரிந்து கொள்ளுங்க!
என் பதிவு உள்நாட்டு அரசியலை பற்றியது அல்ல. நம் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து விவகாரங் களையும் காங்., - பா.ஜ., மோதலாகவோ, தனிப்பட்ட நபர்களை குறிவைப்பதாகவோ பார்க்க வேண்டாம். மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி., - காங்.,