தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 392 பேர் பலி: 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயம்

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 392 பேர் பலி: 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயம்

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 392 பேர் பலி: 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயம்

34


UPDATED : ஆக 27, 2026 10:34 PM

ADDED : ஆக 27, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

34

UPDATED : ஆக 27, 2026 10:34 PM ADDED : ஆக 27, 2026 12:46 AM


34
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்மாண்டு: திபெத்தில் நேற்று பிரமாண்ட பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வழியில் இருந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் பேரழிவில், 392 பேர் பலியாகினர். 49 தமிழர்கள் உட்பட 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகியுள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து துவங்கும் கோஷி ஆறு, மற்றொரு அண்டை நாடான நேபாளம் வழியாக, நம் நாட்டில் பீஹார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு வருகிறது. மொத்தம், 720 கி.மீ., நீளமுள்ள இந்த ஆறு, பொதுவாக கோஷி என்று அழைக்கப்படுகிறது. திபெத்தில், போய்கு என்றும், நேபாளத்தில் போடே கோஷி என்றும், நம் நாட்டில் கண்டக் நதி என்றும் அழைக்கப்படுகிறது.

திபெத்தில் உள்ள ஜாங்க்ஜாக்போவில் பனிப்பாறைகள் உருகி, மிகப்பெரிய ஏரி உருவாகி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 26,286 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரியில், நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் மிக அதிக அளவில் நீர், கீழ்நோக்கி பாய்ந்து, கோஷி ஆற்றில் சேர்ந்தது. இதனால் திடீரென, கோஷி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் ஓரம் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், 20க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை இந்த வெள்ளம் கபளீகரம் செய்தது. திபெத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மற்றும் டாடிங் மாவட்டங்கள் இதனால் கடும் பாதிப்பை சந்தித்தன.

' திபெத்தில் இருந்து பெருவெள்ளம் ஏற்பட்டால் போதிய முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைக்காது. நேபாளம், இந்தியா உள்ளிட்ட கீழ்நிலை நாடுகளில் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது' என 2016லேயே மத்திய நீர் ஆணைய தலைவர் கனஷ்யாம் ஜா சுட்டிக்காட்டியிருந்தார்.

Image 1613091

இந்நிலையில், போடே கோஷி மற்றும் அது இணையும் திரிசூலி நதி கரையோரங்களில் உள்ளவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, நேபாள அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளப் பெருக்கில் சிக்கி, திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 157 பேரும் என மொத்தம், 392 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 288 இந்தியர்கள் உட்பட 1,500 பேர் மாயமாகி உள்ளனர். இதில் தமிழகத்தில் சுற்றுலா சென்ற 57 பேரும் அடக்கம்.

நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, 15க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை நேபாள ராணுவம் பயன்படுத்தியுள்ளது. இதன் பலனாக, 3-0க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அதே நேரத்தில், 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது.

அவசரகால மீட்பு நடவடிக்கைகள் குறித்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் உத்தரவிட்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு


நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள, தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த, தனியார் நிறுவனம், 57 பேரை, நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. இவர்களில், 54 பேர், தஞ்சாவூர், திருச்சி-, கடலுார்-, மயிலாடுதுறை, நாமக்கல்- மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் புதுச் சேரியை சேர்ந்தவர்கள். இவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள, தமிழக அரசின், அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை, உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ளவர்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 309 3793; 80690 09901 ஆகியவற்றை தொடர்பு கொண்டு, விபரம் கேட்கலாம்.
வெளிநாட்டில் இருப்போர், 80690 09900 என்ற எண்களில் 'மிஸ்டு கால்' கொடுத்து தகவல் பெறலாம். மேலும், டில்லியில் உள்ள, தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு அறை எண், 92895 16712 என்ற எண்ணையும், தொடர்பு கொள்ளலாம்.



57 தமிழர்கள் உட்பட 133 இந்தியர்கள் மாயம்


எதிர்பாராத இந்த இயற்கை சீற்றத்தின்போது, நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற, 384 சுற்றுலாப் பயணியர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானோர், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்றவர்கள் என்று கூறப்படுகிறது. மாயமானவர்களில், 57 தமிழர்கள் உட்பட, 133 இந்தியர்களும் அடங்குவர். மேலும், 37 என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் மாயமாகியுள்ளனர். மாயமான சுற்றுலா பயணியரில், 291 பேர் வெளிநாட்டவர்; 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள், அமெரிக்கா, மலேஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள்.



பிரதமர் மோடி தொலைபேசியில் ஆறுதல்


நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும் சேதமும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமர் பாலேந்திர ஷாவை, நம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இது குறித்து பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில், நேபாளத்தில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு, இந்திய மக்கள் முழு ஆதரவாக நிற்பார்கள்.
நேபாளத்திற்குத் தேவையான அனைத்து வகையான மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நம் மீட்புக் குழுவினர் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து, தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்' என குறிப்பிட்டுள்ளார்.



பீஹார், உ.பி.,யில் உஷார்நிலை!



நேபாள வெள்ளத்தைத் தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டியுள்ள பீஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பீஹாரில் கோஷி, கங்கை மற்றும் கண்டக் நதி படுகைகள் அமைந்துள்ள ஆறு மாவட்டங்களில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமையை உடனுக்குடன் கண்காணிக்கவும், மாநிலத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கவும், தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோன்று உத்தர பிரதேசத்தில் கண்டக் மற்றும் நாராயணி நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், மகாராஜ் கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்ட நிர்வாகங்களை முழு எச்சரிக்கையுடன் இருக்க, பா.ஜ.,வைச் சேரந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



தமிழர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் விஜய் உத்தரவு


தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்தி அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன, தமிழகத்தை சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல, அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய துாதரகம் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, மத்திய - மாநில அரசுகள், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கிய ஈஷா யோகா குழு



ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிக்கை: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, திபெத்தின் கியிரோங் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஈஷா யோகா மையத்தின், கைலாஷ் யாத்திரை குழுக்களில் ஒன்று சிக்கிக் கொண்டது. அவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தில் இருந்தபோது வெள்ளம் ஏற்பட்டது. அந்த அலுவலக கட்டடமும், நகரின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிகிறது. இதனால், நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

மீட்புப் பணிகளில் உதவ, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். குடியேற்றத் துறை அலுவலகத்தில் இருந்தவர்களின் நிலை என்ன, அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும், இதுவரை கிடைக்கவில்லை. அந்த இடத்திற்கு செல்ல, அதிகாரிகளுடன் இணைந்து முயற்சித்து வருகிறோம். எத்தகைய ஆபத்து இருந்தாலும், மீட்புப் பணிகளில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்.

எங்கள் யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக திரும்பி விட்டனர். தற்போது 743 பேர் திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும் உள்ளனர். 77 பேர் குடியேற்றத் துறை மையத்திலும், மூன்று தன்னார்வலர்கள் நேபாளத்தின் டிமுரே பகுதியிலும் இருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தில், நானும் பங்கேற்கிறேன். தற்போதைய சூழலில் சிறந்த உதவிகளை உறுதி செய்ய, நான் அப்பகுதிக்கு நேரில் சென்றுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கும்பகோணத்தில் இருந்து: சென்றவர்கள் நிலை என்ன?:


நேபாளத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 'சூப்பர் யாத்திரா' ஏஜென்சி வாயிலாக, 15 நாட்கள் சுற்றுலாவாக, திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக, கடந்த 23ல் தமிழகத்தை சேர்ந்த 57 பேர், சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, டில்லி சென்றனர்.
தொடர்ந்து, நேபாளம் சென்ற யாத்ரீகர்களை, நேபாளத்தை சேர்ந்த 'சாம்ராட் டூரிஸம் அன்ட் டிராவல்ஸ்' என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூன்று வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில், நேற்று திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில், ஒரு சுற்றுலா வாகனத்தில் பயணித்த 20 பேர் பத்திரமாக உள்ளனர். மீதம் உள்ள இரண்டு வாகனங்களில் சென்ற 37 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை.
இது குறித்து, கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் செய்யது சாதிக் கூறியதாவது:
யாத்திரை சென்றவர்களில், ரகு என்பவர் எனக்கு போன் செய்து, 'வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், நாங்கள் வந்த ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் தப்பித்தோம். பின்னால் வந்த இரண்டு பஸ்கள், பள்ளத்தில் சிக்கியதை பார்த்தோம். 'இறங்கி சென்றால் நாம் சிக்கிகொள்வோம்' என டிரைவர் தெரிவித்ததால், மேலே சென்று, ராணுவ மையத்தில் தெரிவித்து விட்டோம்' என்றார். இக்குழுவில் சென்ற, என் மகன் உமர் பாரூக் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி கூறியதாவது: சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் 57 பேர் சென்றுள்ளனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் உள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



சுற்றுலா சென்ற 57 பேர் யார்?


திருச்சியை சேர்ந்த சிவரஞ்சனி, 46, கற்பகம், 62, கிருபாகரி, 49, வள்ளிநாயகி, 62, சத்யா, 58, மயிலாடுதுறையை சேர்ந்த புஷ்பலதா, 60, ரத்தினகுமார், 65, பூங்குழலி, 62, மணிமேகலை, 65, சிவஞானம், 63, ராஜேஸ்வரி, 57, வெங்கட்ராமன், 50, திருவண்ணாமலையை சேர்ந்த கண்ணம்மாள், 67, புதுச்சேரியை சேர்ந்த கீதா, 68, ஆனந்தசுந்தரி, 58, வைஸ்ணவி, 50, கும்பகோணத்தை சேர்ந்த உமர் பாரூக், 29, மற்றும் அன்பழகி, 67, சித்ரா, 61, சிவயோகம், 65, ராம்குமார், 60, கீதா, 56, இளவரசி, 66, ராஜாகுமார், 62, ஜெயந்தி, 54, ரமேஷ், 68, திருமலைராஜன், 54, தையல்நாயகி, 54, தங்கமதி, 49, சாய்நாத், 70, ஜெயலட்சுமி, 64, கேதார கவுரி, 32. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி, 66, வடுவூரை சேர்ந்த பாலசுப்ரமணியன், 58, சென்னையை சேர்ந்த மாறன், 57, சாந்தி, 47, மூர்த்தி, 65, பத்மினி, 61, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரேசன், 56, நாவூ கபிர்தாஸ், 55, விஜயபுவனேஸ்வரி, 55, மைதிலி, 49, தியாகராஜன், 49, கனகசபை, 68, ராதை, 64, பழனியப்பன், 69, கலைமதி, 67, முருகானந்தம், 69, புவனகிரியை சேர்ந்த திரிபுரசுந்தரி, 67, நெய்வேலியை சேர்ந்த திருமாவளவன், 62, தர்மபுரியை சேர்ந்த பிரேமாவாணி, 45, புஷ்பா, 54, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த திம்மராயசாமி, 46, மம்தா, 39, ஓசூரை சேர்ந்த ரகுநாதன், 56, புஷ்பராணி, 59, நாமக்கல்லை சேர்ந்த கிருஷ்ணவேணி, 65, என பெண்கள் 36, ஆண்கள் 57 பேர் சுற்றுலா சென்றனர்.



திடீர் வெள்ள ஏற்பட்டது எப்படி?: நேபாள அறிவியலாளர்கள் கருத்து


காத்மாண்டு பல்கலைக்கழக பேராசிரியரும், பனிப்பாறை ஆய்வாளருமான ரிஜன் பக்தா கயஸ்தா கூறுகையில், “மலையின் மேல்பகுதியில் உள்ள லஹெண்டே ஆற்றை பனிப்பாறை சரிவு அடைத்ததால், தண்ணீர் தேங்கி பின்னர் திடீரென வெளியேறி கோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
“இதே நேரத்தில் திபெத் பகுதியில் ரிக்டர் 4.4 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வெள்ளத்துடன் அதன் தொடர்பு குறித்து உறுதி செய்யப்படவில்லை.
“நேபாள நீரியல் மற்றும் வானிலை துறையும், நேபாளம் அல்லது திபெத் பகுதியில் பனிப்பாறை ஏரி உடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க கனமழை பெய்யவில்லை என்பதையும் அந்தத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. “உறுதியான முடிவுக்கு வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us