ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு இந்தியர்கள் 3 பேர் லிபியாவில் கடத்தல்
ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு இந்தியர்கள் 3 பேர் லிபியாவில் கடத்தல்
UPDATED : டிச 14, 2025 11:41 AM
ADDED : டிச 14, 2025 11:23 AM

புதுடில்லி: குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 3 வயது மகள் ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு, லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் பாதல்புரா கிராமத்தை சேர்ந்தவர் கிஸ்மத் சிங் சாவ்தா. இவரது மனைவி ஹீனா பென். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. கிஸ்மத் சிங்கின் தம்பி, போர்ச்சுக்கல் நாட்டில் வசிக்கிறார். தம்பியின் குடும்பம் வசிக்கும் நாட்டில் தாங்களும் சென்று நிரந்தரமாக தங்கி விட கிஸ்மத் சிங் குடும்பத்தினர் திட்டமிட்டனர்.
நேரடியாக செல்ல முடியாது என்பதால் ஏஜென்ட் மூலம் சட்ட விரோதமாக போர்ச்சுக்கல்லுக்கு குடி பெயர முயற்சித்தனர். ஏஜென்ட் கூறியபடி முதலில் துபாய் சென்ற அவர்கள், அங்கிருந்து லிபியாவின் பெங்காசி நகருக்கு சென்றனர். ஆனால், உறுதி கூறியபடி அவர்களை போர்ச்சுக்கல்லுக்கு ஏஜென்ட் அனுப்பவில்லை. ஆட்கடத்தல் கும்பலிடம் தம்பதியை ஒப்படைத்து விட்டார் அந்த ஏஜென்ட். தற்போது அந்த தம்பதி, ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் வசிக்கும் தம்பதியின் உறவினர்களை தொடர்பு கொண்ட ஆட்கடத்தல் கும்பல், கிஸ்மத் சிங் குடும்பத்தினரை விடுவிக்க ரூ.2 கோடி பிணைத்தொகை தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். உறவினர்கள் அளித்துள்ள புகார் குறித்து மாநில அரசு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
லிபியாவில் இரு தரப்பினருக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கிடையாது. ஆயுதக்குழுக்களின் பிடியில் இருக்கும் நகரில் தம்பதி சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களை மீட்பதில் சிக்கல் இருப்பதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

