அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : அக் 31, 2025 06:06 PM
ADDED : அக் 31, 2025 06:05 PM

  புதுடில்லி: ''அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இப்போது இந்தியப்பெண்கள் தலைமைப்பொறுப்பு வகிக்கின்றனர். உலகிலேயே அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா,'' என்று பிரதமர் மோடி பேசினார்.
டில்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் சமூக சேவையின் 150 ஆண்டுகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி பேசியதாவது: சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் வணங்கி அவருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
அவரது 200வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார். இந்திய விமானப் படையின் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங் ரபேல் போர் விமானத்தை இயக்கினார். இன்று, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பட்டதாரிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று நாம் பெருமையுடன் கூறலாம். இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, அரசியல் காரணங்களால், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்ய சமாஜத்தின் பங்கிற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை, ஆர்ய சமாஜம் தேசபக்தர்களின் அமைப்பாக இருந்து வருகிறது. இந்தியா முன்னேற வேண்டுமானால், நமது சமூகங்கள் இடையே உள்ள அடிமைத்தனத்தை  அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி அறிந்திருந்தார். எனவே, சுவாமி தயானந்த சரஸ்வதி ஜாதி, தீண்டாமை மற்றும் பாகுபாட்டைக் கண்டித்தார்
. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நினைவு நாணயம்
 
தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், சமூகத்திற்கு ஆர்ய சமாஜம் ஆற்றிய 150 ஆண்டுகால சேவையையும் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

