நாட்டின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம் 1' விண்ணில் பறக்க தயார்; ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவிப்பு
நாட்டின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம் 1' விண்ணில் பறக்க தயார்; ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவிப்பு
ADDED : ஜூலை 02, 2026 08:02 PM

புதுடில்லி: புவி சுற்றுவட்டப்பாதை வரை செல்லும் நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட்டான, 'விக்ரம் -1'ன் சோதனை ஏவுதலுக்கான கால அட்டவணையை ஹைதராபாத்தை சேர்ந்த, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இதை சோதனை முயற்சியாக ஏவ உள்ளனர். அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்து வருகின்றன. வரும் 12 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலக்கட்டத்திற்குள், 'விக்ரம் 1' விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
