ADDED : ஜூன் 10, 2026 07:43 PM

நமது நிருபர்
மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வரானார். ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., படுதோல்வி அடைந்தது. அவரும் தோல்வி அடைந்தார்.
இதனால், 15 ஆண்டு கால திரிணமுல் காங்., ஆட்சி முடிவுக்கு வந்தது. தேர்தல் தோல்வியால், திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அவரது உறவினரும், கட்சி பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
திரிணமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அணியும், லோக்சபா எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் எம்.பி.,க்கள் அணியும் செயல்படுகிறது. இதனால் மம்தா கடும் மன உளைச்சலில் இருக்கிறார். இது போதாதென திரிணமுல் காங்., கவுன்சிலர்கள், நிர்வாகிகளும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த 8ல், திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சுகேந்து சேகர் ராய், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார். இன்று இன்னொரு ராஜ்யசபா எம்.பி.,யான சுஷ்மிதா ராஜினாமா செய்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் மம்தா பானர்ஜி, கட்சியை காங்கிரஸுடன் இணைக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மம்தா புதுடில்லியில் நீண்ட நாள் தங்கி இருந்ததும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ராகுல், சோனியாவை சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. இருப்பினும், இதற்கு கட்சியிலிருந்து விலகிய மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார். திரிணமுல் காங்கிரஸை காங்கிரஸுடன் இணைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் 64 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், 20 எம்.பி.க்களும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
