ADDED : நவ 23, 2025 04:02 AM

புதுடில்லி: அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், தன் சொந்த மாநிலமான பீஹாரில், ஜன் சுராஜ் என்ற கட்சியை கடந்தாண்டு அக்டோபரில் துவங்கினார். நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், இவரது கட்சி படுதோல்வி அடைந்தது; ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை அளித்து அவற்றை வெற்றி பெற செய்த பிரசாந்த் கிஷோரால், தன் சொந்த மாநிலத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. இவரது கட்சிக்கு வெறும், 3.4 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
ஆனால், இப்படி கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் முதல்வர் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2012ல் ஆம் ஆத்மியை ஆரம்பித்து, 2013 டிசம்பரில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இதே போல, பிரசாந்த் கிஷோரால் வெற்றி பெற முடியவில்லை; என்ன காரணம்?
இளைஞர்களை தன் பக்கம் இழுக்க பிரசாரம் செய்தார். 'நிதிஷ் ஆட்சியில் ஊழல், வேலை வாய்ப்பு கிடையாது. பீஹாரில் தொழிற்சாலைகள் இல்லை. இதனால், பீஹாரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்' என, கடுமையாக பிரசாரம் செய்தார். மீடியா இவருக்கு பல விதங்களில் உதவி செய்து, தேசிய அளவில் கிஷோர் பிரபலம் ஆனார்.
வெற்றி பெற்றால் மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் சாராயத்தைக் கொண்டு வருவேன் என சொல்லி இளைஞர்களைக் கவர்ந்தார். ஆனால், இதுவே இவருக்கு வினையாகிவிட்டது. கிராமத்திலுள்ள பீஹார் பெண்கள் சாராயத்தால் கஷ்டப்பட்டவர்கள். இவர்கள் அதிக அளவில் நிதிஷ் குமாருக்கு ஓட்டளித்தனர்.
அப்படியெனில், பிரசாந்த் கிஷோரின் அரசியல் அவ்வளவு தானா? '48 வயதாகும் இவருக்கு இனிதான் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறது' என்கின்றனர். நிதிஷ் - லாலுவிற்கு பின், பீஹார் அரசியலில் கிஷோருக்கு வாய்ப்பு உள்ளது; இன்னும் வயது இருக்கிறது.
ஆனால், அதுவரை இவர் அரசியலில் நீடிக்க வேண்டுமே? 'தோல்வி அடைந்தாலும் அரசியல் தொடரும்' என, உறுதி அளித்து விட்டார் கிஷோர். எனவே, அடுத்த பீஹார் சட்டசபை தேர்தலில் கிஷோர் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

