உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்
உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்
ADDED : டிச 16, 2025 03:55 AM

திருநெல்வேலி: ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல. கேவலமாக உள்ளது'' என ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார்.
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க அவரது அலுவலகத்தில் ரூ 2.50 லட்சம் பணத்தை முன்னரே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சிக்க வைக்க முயற்சித்த வழக்கு சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது.
இது குறித்து துணை இயக்குனர் சரவணபாபு புகாரின் பேரில் பணம் வைத்த விஜய், உதவிய முத்து சுடலை திட்டமிட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்படும் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கு விசாரணை நடந்தது.
பாதிக்கப்பட்ட துணை இயக்குனர் சரவணபாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்றநாடகத்தில் முக்கிய குற்றவாளியாக தீயணைப்பு அலுவலர் வீரராஜ் உள்ளார். அவர்தான் மற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரை இணைத்து நெட்வொர்க்கை ஏற்படுத்தி உள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுப்பின்னணியும் தெரியவரும். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியும் என்றார்.
தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜரானார்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் சக அதிகாரிகள் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல. கேவலமாக உள்ளது.
இவர்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நபராக கருதப்படுவதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும். இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும். எனவே முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். ஜன. 2 ல் அவருக்கு ஜாமின் கேட்டு மனு செய்யுங்கள் என்றார்.

