8 ஆண்டுகளில் 73 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!
8 ஆண்டுகளில் 73 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!
UPDATED : டிச 10, 2025 09:11 PM
ADDED : டிச 10, 2025 07:59 PM

-நமது நிருபர்-
பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் புகார் கொடுத்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 8 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகளுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார்.
நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதை திமுக அரசு எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டு வர வலியுறுத்தும் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி சுவாமிநாதன் மற்றும் அவரது தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புள்ளிவிவரம்
இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை வழக்குகளில் உத்தரவு வழங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017 முதல் 2025 வரை பிரதான வழக்குள்( சிவில்,கிரிமினல், மேல்முறையீடு, ரிட் மனு) மற்றும் மிசலேனியஸ் வழக்குகளை( ஜாமின் உள்ளிட்ட மனுக்கள்) விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதன்படி இந்த எட்டாண்டுகளில் மட்டும் 73,505 பிரதான வழக்குகள் மற்றும் 46,921 மிசலேனியஸ் வழக்குகள் என மொத்தம் 1,20,426 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற புள்ளி விவரம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் அவர், காலை 9 மணிக்கு வழக்கை விசாரிக்க துவங்கினாலும், இரவு எவ்வளவு நேரம்ஆனாலும் நீதிமன்றத்தில் இருந்து தனது கடமையை நிறைவேற்ற தவறியது இல்லை. இதனை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தினமும் பார்த்து வருகின்றனர்.
பாராட்டு
அவரை பதவி நீக்கம் செய்ய திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு கொடுத்த நிலையில், எத்தனை வழக்குகளை அவர் முடித்துள்ளார் என்ற புள்ளி விவரம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை வழக்கறிஞர்கள், வழக்கை தொடர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
தெளிவான பணி
இது தொடர்பாக பாஜவின்தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிக விரைவாக வழக்குகளை முடித்து வைப்பதுடன், காலை 9 மணிக்கு துவங்கி மாலை எந்நேரமானாலும் வழக்குகளை விசாரிக்கும் கடமையுணர்வு. கடந்த எட்டு வருடங்களில் 73,505 வழக்குகளை முடித்து வைத்திருக்கும் ஆற்றல். யாருக்கும் அஞ்சாது நேர்மையான, தெளிவான பணி!
இப்போது புரிகிறதா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா? ஊர் இரண்டு பட்டால் தானே கூத்தாடிக்கு கொண்டாட்டம்? வழக்குகள் இல்லையென்றால், தங்களின் பிழைப்பு போய் விடுமே என்று திராவிட மாடல்கள் அஞ்சுவது இயல்பு தானே? இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

