மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்; இறங்கி வந்தார் அதிபர் டிரம்ப்
மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்; இறங்கி வந்தார் அதிபர் டிரம்ப்
UPDATED : செப் 10, 2025 07:06 AM
ADDED : செப் 10, 2025 06:44 AM

நியூயார்க்: எனது நல்ல நண்பர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய காரணத்தால் இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த வெவ்வேறு துறை அமைச்சர்களும், இந்தியாவை மிரட்டும் வகையில் தாறுமாறாக பேட்டிகள் அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முற்றிலும் சீர் குலைந்துள்ளது
இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தையே கிடையாது என்றும், வரி விதித்தது விதித்ததுதான் என்றும் சமீபத்தில் டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் பட்சத்தில் அவர்கள் அமெரிக்காவுக்கு வரி செலுத்தி ஆக வேண்டும் என்றும் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த செயல்பாட்டை இந்தியா பொருட்படுத்தவில்லை. இந்திய பிரதமருடன் பேசுவதற்கு அதிபர் டிரம்ப் 4 முறை முயற்சித்தும் மோடி போன் எடுக்கவில்லை என்றும் ஜெர்மானிய பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களுடன் நெருக்கம் காட்டினார். இது தொடர்பான படங்கள் வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரல் ஆகின.
அவற்றைப் பார்த்த அதிபர் டிரம்ப், இந்தியாவை சீனாவிடம் இழந்து விட்டோம் என்று வெளிப்படையாக புலம்பித் தள்ளினார். இத்தகைய சூழ்நிலையில் இன்று சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பர் மோடியுடன் பேசுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.வெற்றிகரமான பேச்சுவார்த்தை முடிவை எட்டுவதில் எந்த விதமான சிரமமும் இருக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.