ADDED : நவ 19, 2025 05:19 AM

சென்னை: 'வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், 17 செ.மீ., மழை பெய்து உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 14; நாலுமுக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் தலா 13; நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா, 12 செ.மீ., மழை பெய்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவியது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வட மேற்கு திசையில், மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நவ., 22ல் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ., 21முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

