காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய ஊடுருவல்... முறியடிப்பு!: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய ஊடுருவல்... முறியடிப்பு!: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : நவ 08, 2025 11:50 PM

ஜம்மு: பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தபடி நம் நாட்டுக்குள் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை, நம் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். எல்லையோரம் உள்ள குப்வாரா மாவட்டம் வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். --------
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், சூடுபட்ட பூனையாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமைதிகாத்து வந்தனர். அதேநேரம், ஜம்மு - காஷ்மீருக்குள் மீண்டும் ஊடுருவி, மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டமிட்டு வரும் தகவல், நம் உளவுத்துறைக்கு கிடைத்தது.
இதை தொடர்ந்து, எல்லையோர கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டன. ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., நலின் பிரபாத் தலைமையில் உயர்மட்ட கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியான முடிவுகளின்படி எல்லை தாண்டிய ஊடுருவலை தடுக்கும் வகையில் குல்காம், ரஜோரி, தோடா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தினர்.
உளவுத்துறை தகவலின்படி, குல்காம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதுதவிர, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ஏற்கனவே கைதாகி விடுதலையான நபர்களின் வீடுகள், சமீபத்தில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன.
இந்த சோதனையில், பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, 'டிஜிட்டல்' சாதனங்கள், ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கான பிரசார நோட்டீஸ்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளூர் மக்களில் சிலர், பாக்., பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பது, புகலிடம் தருவது, ஆட்களை சேர்ப்பது, உணவு அளிப்பது, தளவாடப் பொருட்கள் அளித்து உதவுவது போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இந்த உதவிகள் முக்கிய பங்காற்றின.
இதுபோன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோரை கண்டறிந்து, சிறையில் அடைத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக எல்லையோரம் அமைந்துள்ள குல்காம், தோடா, ரஜோரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகிறோம். பயங்கரவாத ஆதரவு கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டு முற்றிலுமாக அகற்றப்படும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறை கைதிகள், சட்டவிரோதமாக, 'மொபைல் போன்'களை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு சதிச்செயல்களில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தன. இதையடுத்து, சிறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

