ADDED : அக் 02, 2025 03:32 AM

மும்பை: நம் நாட்டில், பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில், ஆண்டுதோறும் நாடு முழுதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளி விபரங்களை வெளியிடுவது வழக்கம். இதன்படி, -பொருளாதாரம், சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது.
அதன் விபரம்:
கடந்த 2023ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில், 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, தெலுங்கானா, 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதேபோல் 19,803 நிதி மோசடி வழக்குகளில் மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
எனினும், கடந்த 2023ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை, 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. இதேபோல் தெலுங்கானாவின் ஹைதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2023ல், சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கர்நாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. அடுத்ததாக, தெலுங்கானாவின் ஹைதராபாத், 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை, 4,131 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.