நீதிமன்றம் அளித்த சவுக்கடி தீர்ப்பு; நயினார் நாகேந்திரன் வரவேற்பு
நீதிமன்றம் அளித்த சவுக்கடி தீர்ப்பு; நயினார் நாகேந்திரன் வரவேற்பு
UPDATED : டிச 04, 2025 06:29 PM
ADDED : டிச 04, 2025 06:18 PM

சென்னை: ஹிந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுகவுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு பதிந்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக அரசு கடமையைச் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியதோடு, ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது தமிழர்களின் பண்பாட்டு உரிமையைப் பறிப்பதற்காகவே திமுக அரசு வழக்கு பதிந்துள்ளதை உறுதி செய்கிறது.
இன்று உயர்நீதிமன்றக் கிளையிடம் பெற்ற சவுக்கடி தீர்ப்புக்குப் பிறகாவது தனது ஹிந்து மத வெறுப்புணர்வை திமுக அரசு மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய இறுதி கட்டத் தருணத்திலாவது ஹிந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்புக்கு தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

