ADDED : அக் 20, 2025 07:45 PM

சென்னை: தனது அடுத்த சிம்பொனி இசையை எழுதுவது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ளார். அத்துடன், சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளதாகவம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமை இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இப்போதும் 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், இளையராஜா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். அம்மாவின் நினைவு தினத்துக்கு செல்கிறேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்களுக்கு எல்லாம் இன்னொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்.இவ்வாறு அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.