ADDED : ஜன 20, 2026 03:16 AM

சென்னை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சத்துணவு ஊழி-யர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, சங்க நிர்வாகிகளுடன், சமூக நலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், நேற்று பேச்சு நடத்தினார்.
அவகாசம்
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில், 12 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 'கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம்' என, அரசு தரப்பில் கோரப்பட்டு உள்ளது.
அதில் உடன்பாடு இல்லாததால், அறிவித்தபடி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்குவோம் என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலர் ஜெசி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒட்டி, கடந்த 3ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், சத்துணவு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தொகுப்பூதிய முறையில் இருந்து கால முறை ஊதியத்திற்கு மாற்றக் கோரி, 45 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'ஊழியர்கள் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவர். ஓய்வூதியமாக மாதம் 6,750 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
உடன்பாடு இல்லை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை. கடந்த மாதம் நடந்த போராட்டத்தின்போது, '15 நாட்களில் நல்ல செய்தி வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்; வரவில்லை.
தற்போது, சமூக நலத் துறை செயலருடன் நடந்த பேச்சிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, அறிவித்தபடி எங்கள் சங்கத்தில் உள்ள, 71,000 ஊழியர்களும், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார் .
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பது கூட, தி.மு.க.,வினருக்கு உறைக்கவில்லையா' என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மற்றொரு பிரிவின், மாநிலத் தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ''மொத்தமுள்ள, 14 சங்கங்களில், ஒரு சங்கம் மட்டும் தான், இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளது. மீதம் உள்ள, 13 சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை,'' என்றார்.

