பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் கண்டனம்: ஜெய்சங்கர் வரவேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் கண்டனம்: ஜெய்சங்கர் வரவேற்பு
ADDED : செப் 14, 2026 07:55 PM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பிரிக்ஸ் மாநாட்டில் கண்டிப்பது தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரிக்ஸ் மாநாட்டின் டில்லி பிரகடனத்தின் வாயிலாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை வெளிப்படையாக கண்டித்துள்ளது. எந்தவொரு பயங்கரவாத செயலும் குற்றமாகும் என்பதில் பிரிக்ஸ் அமைப்பு மிகவும் தெளிவாக இருந்தது. 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை வெளிப்படையாக பிரிக்ஸ் அமைப்பு அங்கீகரித்தது.எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டித்ததோடு , அதில் இரட்டை நிலைப்பாட்டையும் நிராகரித்தனர்.
பிரதமர் மோடியின் ராஜதந்திரம் மற்றும் வளர்ச்சி குறித்த செய்தி உலகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த செய்திக்கு கிடைத்த வரவேற்பைத் தான் பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக தலைவர்கள் வந்த போது நாம் கண்டோம். இது நடக்காது என்று பலர் சொன்னார்கள். ஆனால், அது நடந்தது.பிரதமர் மோடியின் கீழ் நடந்தது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
பிரிக்ஸ் மாநாடு
டில்லியில் நேற்று முன்தினம்( செப்.,12) துவங்கிய பிரிக்ஸ் மாநாடு, நேற்று முடிவடைந்தது. இந்த மாநாட்டில் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது: '' ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்ததுடன், பயங்கரவாதத்தின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் நடமாட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.
ஐநா சபையின் சீழ் சர்வதேச பயங்கரவாதம் மீதான விரிவான உடன்படிக்கையை விரைவாக இறுதி செய்து பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அனைவரும் மற்றும் பயங்கரவாத அஐமப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள், பணமோசடி, இணையவழி மற்றும் எல்லை தாண்டிய வலையமைப்புகள் குறித்தும் அந்த பிரகடனத்தில் கவலை தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பயங்கரவாதம் குறித்து ஒருமித்த கருத்தில் சீனா இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
