காஷ்மீரை சேர்ந்த சிலரால் அமைதி கெடுகிறது: உமர் அப்துல்லா
காஷ்மீரை சேர்ந்த சிலரால் அமைதி கெடுகிறது: உமர் அப்துல்லா
UPDATED : நவ 13, 2025 09:15 PM
ADDED : நவ 13, 2025 09:09 PM

ஜம்மு: '' காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலரால் தான் அமைதியும், சகோதரத்துவமும் கெடுகிறது'', என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஹரியானாவில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் காரை வெடிக்கச் செய்த டாக்டர் உமர் நபியும் காஷ்மீரை சேர்ந்தவன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உமர் அப்துல்லா கூறியதாவது: இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதை எந்த மதமும் நியாயப்படுத்தாது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலர் தான், அமைதியையும், சகோதரத்துவத்தையும் கெடுக்கின்றனர்.
காஷ்மீரில் இருக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற ஒரே பார்வையில் பார்த்தால், மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அப்பாவி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு நாம் பல்கலை பேராசிரியர்களைப் பார்த்தது இல்லையா? படித்தவர்கள் பயங்கரவாத விஷயங்களில் ஈடுபடுவதில்லை என்று யார் கூறுகிறார்கள் அவர்களும் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் விசாரணை என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏன் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. நிலைமையை அமைதியாக வைத்திருக்க மத்திய அரசுக்கு மட்டும் நாங்கள் உதவ முடியும். அதனை நாங்கள் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

