"இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
"இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
UPDATED : அக் 31, 2025 09:09 AM
ADDED : அக் 31, 2025 08:33 AM

புதுடில்லி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். எனவே அவர் நாட்டின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவர், குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக்., 31ல் பிறந்தார். இவரது 150வது பிறந்த நாள் இன்று தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி மரியாதை
 
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில்
 உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர்
 மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் 
ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரும்பு மனிதர் 
 
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கை: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்.அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார்.
அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மரியாதை 
 
டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிறப்பு வாய்ந்த நாள்
 
டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த தேசிய ஒற்றுமை தின விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள். இன்று எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய ஒற்றுமை தின விழாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அதை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஒன்றிணைப்பதிலும்,  வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்குவதிலும் சர்தார் வல்லபாய் படேல் மகத்தான பங்களிப்பை வழங்கி உள்ளார். காங்கிரஸ் அரசு சர்தார் வல்லபாய் படேலுக்குப் போதுமான மரியாதை அளிக்கவில்லை.
பாரத ரத்னா 
 
41 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டில் எங்கும் ஒரு நினைவு இடத்தையும் கட்டப்படவில்லை. நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற போதுதான், சர்தார் படேலின் நினைவாக ஒரு பிரமாண்டமான நினைவு இடத்தை கட்டினார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

