பதவியை ராஜினாமா செய்யவும் தயார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
பதவியை ராஜினாமா செய்யவும் தயார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 28, 2026 07:10 PM

புதுச்சேரி: மாநில அந்தஸ்துக்காக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில், ஜான்குமார் எம்எல்ஏ பேசுகையில், ''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து சுலபமாக கிடைத்து விடும். ஆனால், சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும்,'' என்றார்.
தவெக எம்எல்ஏ ராமு, ''நீங்கள் அங்கம் வகிக்கும் பாஜ தான் மத்தியில் ஆள்கிறது. நீங்கள் அங்கு கேட்கலாமே,'' என்றார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், ''மாநில அந்தஸ்து தராமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, சபையை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
சபாநாயகர், ''சபையை ஏன் ஒத்தி வைக்க வேண்டும். மக்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களின் நலனுக்காக உங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள்,'' என்றார்.
அதற்கு ஜான்குமார், ''என் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என்றார். எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். காங். - எம்எல்ஏ கார்த்திகேயனும் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதைத் தெடார்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு அதிகாரம் வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியும். மாநில அந்தஸ்து கேட்டு டில்லிக்கு செல்ல தயாராக உள்ளேன்.
மாநில அந்தஸ்திற்காக பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளேன். பிரதமரிடம் கூட மாநில அந்தஸ்து தராமல் இருப்பது குறித்து வருத்தமாக பேசினேன். மாநில வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்த்து தேவை,'' என்றார்.
இதனை தொடர்ந்து மேலும் பல எம்எல்ஏக்களும், மாநில அந்தஸ்த்துக்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தனர்.
